கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் திருச்சியில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கின்றது. உலக புகழ் பெற்ற மருத்துவர்கள் பலர் உள்ளூர் பள்ளியில் படித்தவர்கள் என்பதை நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுபவர்கள் உணர வேண்டும்.
மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை. இந்த தேர்வினை பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நீட் தேர்வு வளரும் பிள்ளைகளின் கல்வியை, எதிர்காலத்தை பாதிக்கும். இதனால், மாணவர்கள் பலர் மனதுக்குள் நொந்து கொண்டு இருக்கின்றனர்.
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் என்பவர் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என்று தெரிவிக்கின்றார். ஆலையை மூடுவதாக கூறுவது தமிழக அரசின் சதி நாடகம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல.
இதனால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கி விட வாய்ப்பு உள்ளது. சட்டசபையைக் கூட்டி, மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி, ஆலையை மூட சட்டம் கொண்டு வந்த பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அப்போது தான் மீண்டும் ஆலையைத் திறக்க முடியாது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகின்றோம் நாங்கள் சமூக விரோதிகளா? சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் சமூக விரோதிகளா? ஸ்டெர்லைட் எங்கு லைசென்ஸ் வாங்கினாலும், அதற்கு எதிராக போராடுவோம். மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியை விட உக்கிரமான போராட்டம் தமிழகத்திலும் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.