மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் விதிமுறைகளை மீறி, வரைமுறையின்றி அதிகாரிகளால் வண்டல் மண் எடுப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் விதிமுறைகளை மீறி, வரைமுறையின்றி அதிகாரிகளால் வண்டல் மண் எடுப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட எல்லைக்குள் அமைந்திருந்தாலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியே கடந்து செல்லும் பவானி நதியே அணைக்கு நீர் ஆதாரம். இதனால், அணையின் நீர்தேக்கப் பகுதிகள் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட சிறுமுகை, கூத்தாமண்டி, லிங்காபுரம், மொக்கைமேடு, காந்தவயல் போன்ற இடங்களில் அமைந்துள்ளன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்த அணையை வனத்துறையும் நிர்வகித்து வருகிறது.
ஆண்டுக்கு மழைக்காலங்களான 3 மாதங்கள் மட்டுமே இங்கு நீர் நிரம்பி காணப்படும் என்பதால், மீதமுள்ள ஒன்பது மாதங்கள் இந்த இடங்களில் விவசாயிகள் கந்தாயம் என்னும் குறைந்த கட்டணத்தில் விவசாயம் செய்ய பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த 1972-ம் ஆண்டு முதல் சுமார் இரண்டாயிரம் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் இங்கு விவசாயம் செய்வதையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
எந்தநேரமும் நிலங்கள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதால் மூன்று மாத அறுவடை பயிர்களான நாட்டுக் காய்கறிகளான பூசணி, அவரை, தட்டைக்காய், கத்திரிக்காய், அரசாணி, வெண்டை போன்ற பயிர்களையே பெரும்பாலும் பயிரிட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக போதிய மழையில்லாத காரணத்தினாலும், கடந்தாண்டு இரு பருவமழைகள் பொய்த்து போனதாலும் டேம் காடு என்று பொதுவாக அழைக்கப்படும் மொக்கைமேடு, கூத்தாமண்டி, லிங்காபுரம் உள்ளிட்ட நீர்தேக்கப் பகுதிகள் பெரும்பாலும் நீர் இருப்பு குறைந்து வறண்டே காணப்படுகின்றன.
இச்சூழலைப் பயன்படுத்தி அணையின் நீர்தேக்கப் பகுதிகளை தூர்வாரப்படும் என அறிவிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக இங்குள்ள வண்டல் மண் அள்ளப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தினசரி நவீன மண் அள்ளும் இயந்திரங்கள் உதவியோடு எடுக்கப்படும் இந்த வளமான வண்டல் மண், பிற பகுதி விவசாய நில மேம்பாட்டிற்கு என்ற பெயரில் பெரும்பாலும் செங்கல் தயாரிப்பு சூளைகளுக்கும், பெரிய பண்ணை தோட்டங்களுக்கும், கட்டிடம் கட்ட நில சமன்பாட்டிற்கும் ஒரு லாரி மண் ரூ. 6,000 முதல் ரூ.10,000 வரை விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தூர்வாருதல் என்ற பெயரில் விதிகளை மீறி, எவ்வித வரைமுறையுமின்றி 10 அடி ஆழம் வரை முன் அறிவிப்பு இன்றி மண் தோண்டி எடுக்கப்படுவதால் பல இடங்கள் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்நிலத்தை நம்பி வாழும் விவசாயிகளின் பிழைப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அறுவடைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தயாராகும் காய்கறி பயிர்களை அழித்து மண் அள்ளும் பணி தொடர்வதால், பலரும் அவசர கோலத்தில் முழுமையாக வளர்ச்சி பெறாத காய்களைப் பறித்து அப்புறப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு இதுவரை வாழ்வளித்த விளைநிலங்கள் பள்ளங்களாக மாற்றப்பட்டு இனி அங்கே விவசாயத்தையே தொடர இயலாது என்ற சோகத்தில் அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மண் அள்ளும் பொக்லின் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
அதோடு, சிலர் அங்கேயே தீக்குளிக்க போவதாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் மண் அள்ளும் பணிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கட்டுப்பாடின்றி தாறுமாறாக அள்ளப்படும் மண்ணால் இப்பகுதி வனச்சூழல் அழிக்கப்பட்டு வருவதாக இயற்கை நல ஆர்வலர்கள் சார்பில் குற்றம்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. கடுமையான வறட்சி காலத்திலும் தண்ணீர் உள்ள இப்பகுதிக்கு யானைகள், காட்டெருதுகள், மான்கள், புலி, சிறுத்தை என எண்ணில் அடங்கா வனஉயிரினங்கள் தங்களது தாகம் தீர்க்க வருகின்றன.
ஆனால், பொக்லின் இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்கள் பள்ளங்களாக மாற்றப்படுவதால், தாவர உண்ணிகள் விரும்பி உண்ணும் புல்வெளிகள், தாவரங்கள் அழிக்கப்படுகிறது. அதோடு, நீரை தேடி இவை வரும் பாதையெங்கும் பள்ளங்களாகக் காட்சியளிக்கின்றன.
இப்பள்ளங்களில் உள்ள சகதிகளில் சிக்கி ஏற்கனவே யானைகள் இறப்பது இப்பகுதியில் தொடர்கதையாகிறது. மண் அள்ளும் இயந்திரங்களும் நூற்றுக்கணக்கான லாரிகளும் அடர்ந்த வனப்பகுதியில் இயங்கியபடி இருப்பதால் வன உயிரினங்களின் நிலை பரிதாபமாகி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.