திருப்பூர் : திருப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அபராதம் வசூலிக்கும் வகையில் பி.ஓ.எஸ் கருவிகளை காவல் ஆணையர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார்.
திருப்பூர் : திருப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அபராதம் வசூலிக்கும் வகையில் பி.ஓ.எஸ் கருவிகளை காவல் ஆணையர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார்.

மாநகரில் விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் இடங்கள் என கண்டறியப்பட்ட முக்கியமான பகுதிகளில் காமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசால் ரூ. 14 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 38 காமிராக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் 9 காமிராக்கள் என என 47 இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இவற்றின் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்குமாறு நவீன கட்டுப்பாட்டு மையம் மாநகர காவல் ஆணையரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையர் நாகராஜன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதத்தை போலீசார் பணமாக வசூல் செய்வதால் ஏற்படும் குளறுபடிகளை தடுத்திடும் வகையில், வங்கிகள் மூலம் இணைக்கப்பட்ட பி.ஓ.எஸ் கருவிகளையும் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "வங்கிகள் மூலம் இணைக்கப்பட்ட பி.ஓ.எஸ் கருவிகள் உபயோகிப்பதன் மூலம், அபராதம் வசூல் செய்வதில் ஏற்படும் முறைகேடுகளை தடுத்திட முடியும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்திடும். இனி காவல் துறையிடம் பொதுமக்கள் பணமாக அபராதம் செலுத்த வேண்டாம்.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இல்லாத வாகன ஓட்டிகள் நேரடியாக வங்கியில் அபராதம் செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிராக்கள் மூலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்திட முடியும்." என்றார்.