கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.எம்.சி., காலனி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும், தலித் மக்களை உள்ளடக்கிய இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 200 பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை வெள்ளலூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை முறைகேடுகள் இன்றி பெற்றுத் தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாய், தலையணை, காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தினக்கூலி பணிக்கு செல்லும் தங்களுக்கு, சொந்த இடத்திலேயே வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.