கோவை: கோவையில் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோருக்கு கோவை விடுமுறைகால நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
கோவை: கோவையில் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோருக்கு கோவை விடுமுறைகால நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இரண்டு பேரும் தினமும் சூலூர் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.