மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணியினை வனத் துறைனர் தொடங்கியுள்ளனர்.
மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணியினை வனத் துறைனர் தொடங்கியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, எதிர்படும் மனிதர்களையும் தாக்குகிறது. இதன் காரணமாக, வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவானது.
புதிய கருவி
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வனத்தையொட்டியுள்ள ராயர் ஊத்துப்பதி என்ற கிராமத்தில் உயரமான ஒரு கட்டிடத்தின் மீது எச்சரிக்கை கருவி (ELEPHANT ALERT) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவியின் மேற்பகுதியில் சிகப்பு மின் விளக்கும், சப்தம் எழுப்பும் 'சைரனும்' பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் எண்களை பதிவு செய்வதற்கான சிம் கார்டு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

வனத்தைவிட்டு யானைகள் வெளியேறியதாக தகவல் கிடைக்கும் பட்சத்தில், வனத்துறையினர் இந்த கருவிக்கு ஒரு 'ரிங்' விடுவார்கள். அடுத்த நொடியே மேலே உள்ள சிகப்பு விளக்கு எரிவதோடு, மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சப்தம் கேட்கும் அளவிற்கு சைரன் பலத்த ஒலி எழுப்பத் தொடங்கிவிடும். இதனையடுத்து, கிராம மக்கள் தங்களது பகுதியில் யானைகள் நடமாட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கலாம். மேலும், வெளியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடலாம்.
பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, இது போன்ற எச்சரிக்கை கருவிகளை மலையோர கிராமங்களில், மொத்தம் 47 இடங்களில் பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது போன்ற முன்னெச்சரிக்கை கருவிகளை, யானைகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் பல்வேறு இடங்களிலும் பொருத்த மாவட்ட வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.