கோவை : நோயாளியுடன் பொள்ளாச்சியில் இருந்து அதிவேகமாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் நோயாளிக்கு காயம் ஏற்பட்டது.
கோவை : நோயாளியுடன் பொள்ளாச்சியில் இருந்து அதிவேகமாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் நோயாளிக்கு காயம் ஏற்பட்டது.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நாகராஜ். மூச்சு பிரச்சனை காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நாகராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் இன்று கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தநிலையில், ஆம்புலன்ஸ் மலுமச்சம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நாய் ஒன்று குறுக்கே புகுந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உடனடியாக பிரேக் அடித்தார். இதில் நிலைகுலைந்த ஆம்புலன்ஸ் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நாகாராஜ்-க்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது.
விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சில் இருந்த நாகராஜ், அவரது உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் வேறு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாநகர பகுதிகளில் தெருநாய்களால் அடிக்கடி விபத்து நடப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தெரு நாய் ஒன்றால் நடந்த இந்த விபத்து சம்பவம் கோவை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.