மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் நீலகிரி மலை ரயிலின் இயக்கம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஆய்வு நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் உள்ள மலை ரயில் கண்காட்சியகம் மற்றும் ரயில்வே பணிமனைகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சுற்றுலா திட்டங்களுக்கு ரயில்வே துறை முன்னுரிமை கொடுத்து, பயணிகளின் வசதிக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலுக்கு கூடுதலாக ஒரு என்ஜினும், பதினைந்து புதிய பெட்டிகளும் தயாராகி வருகிறது.
தற்போது, கோடை விடுமுறையை முன்னிட்டு இங்கிருந்து இயக்கப்படும் கூடுதல் மலை ரயிலின் கட்டணம் அதிகம் என்ற கருத்து உள்ள போதிலும், சிறப்பு ரயிலுக்கு இக்கட்டண உயர்வு தவிர்க்க இயலாது.
மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரை தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரிவாக்க திட்டம் உள்ளது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை ஆறு மணிக்குள் மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. அன்று இரவு 7.45 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிப் புறப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்த இடைபட்ட நேரத்தில், இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வழியாக மதுரை வரை இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார்.