கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை: ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, டெல்லி, உத்தரகாண்ட உள்ளிட்ட வடமாநிலங்களில் புழுதி புயல் தாக்கியதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த இந்த புயலால் வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த புழுதி புயல் தமிழகத்தை தாக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், "தமிழகத்தை புழுதி புயல் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது, சுழல் காற்று காரணமாக நிலத்தின் மீது உள்ள மண், காற்றில் கலந்து புழுதி புயல் ஏற்படுகின்றது. வடமாநிலங்களில் மண்ணின் பிடிப்புத் தன்மை குறைவு.
வடமாநிலங்களில் வீசக் கூடிய காற்றைப் போல் தமிழகத்தில் வேகமாக காற்று வீசாது. அதே நேரம் தமிழகத்தில் உள்ள மண்ணின் பிடிப்புத் தன்மை அதிகம். ஆகையால் புழுதி புயல் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
மழை-வெயில்
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர வெப்பநிலையானது குறைந்துள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேர வெப்பநிலையானது 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.காற்றின் வேகம் 12 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து, இரண்டு நாட்களுக்குள் குறைந்து 8 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது." என்றார்.