கோவை : கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெஸ்பிளை ஏவியேசன் மற்றும் நேரு கல்லூரி சார்பில் நடத்தப்படும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு ஹெலி கார்னிவெல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கப்பட்டது.
இது குறித்து கிருஷ்ணகுமார் பேசுகையில், " இந்த நிகழ்ச்சி வரும் 10 முதல் 15ம் தேதி வரை கங்கா நர்சிங் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியில் 5 வயது முதல் உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு கோவையைச் சுற்றி பறக்கலாம். ஒவ்வொரு பயணமும் 10 நிமிடங்கள் வரை இருக்கும். இந்த 10 நிமிடங்களில் மருதமலை, வெள்ளியங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் மற்றும் ஈஷா யோகா மையம் போன்ற இடங்களைப் பார்க்க முடியும். இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 3,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என்றார்
ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு www.justfly.com என்ற இணையதள முகவரிக்கு சென்றும், 0422-4500 600, 96009-77711 என்ற தொலை பேசி எண்களைத் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.