நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று மொழி பிரச்சனை, தங்குமிடம் இல்லாமல் தவித்து வந்த தமிழக மாணவர்களுக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று மொழி பிரச்சனை, தங்குமிடம் இல்லாமல் தவித்து வந்த தமிழக மாணவர்களுக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று தேர்வு எழுத உள்ளனர். தற்போது, வெளி மாநிலம் சென்றுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறை காரணமாக, ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டதால், இடம் கிடைக்காமல் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன், அரசின் தாமதமான பயணப்படிகளின் அறிவிப்பால், அதனைப் பெற முடியாமலும் வெளி மாநிலத்தில் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும், மொழி பிரச்சனை ஒருபுறம் இருக்க, தேர்வுக்காக ஏற்கனவே வெளிமாநிலங்களுக்குச் சென்றவர்களால், தங்குமிடம் இன்றி பெரும்பாலானோர் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு, அங்கு ஜவுளிக் கடை வைத்து நடத்தி வரும் திருமலை உதவி செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் 20 வருடங்களாகக் கடை வைத்து உள்ளேன். தற்போது, நீட் தேர்வு எழுத வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எங்கு செல்ல வேண்டும், எந்தப் பேருந்தில் ஏறுவது, தங்குவது எப்படி என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது வரை 150-க்கும் மேற்பட்டவர்கள் வந்து இங்கு வந்து இருப்பார்கள். நான் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஏனெனில், எனது மகளும் திருநெல்வேலியில் நீட் தேர்வு எழுத உள்ளார். அவரும் சிரமப்பட்டு தான் அங்கு சென்றார். அதனால் நான் இங்கு வருபவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்," என்றார்