கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு, பேரூராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு, பேரூராட்சியின் அலட்சியமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் இந்திரா நகர் பகுதி உள்ளது. சுகாதாரப் பணியில் ஈடுபடும் தலித், அருந்ததியர் வாழும் இப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. இந்நிலையில், அந்தப் பகுதியில் வசித்து வரும் சோமசுந்தரம், சாந்தாமணி தம்பதியினரின் மகன் மனோஜ்குமார் (10), சாக்கடை, மழைநீர் தேங்கிய குழியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு நாட்களாகக் கோவையில் பலத்த மழை இரவு நேரத்தில் பெய்து வருகிறது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் அன்னூர் பகுதியில் மழையின் அளவு கூடுதலாக பதிவாகியுள்ள நிலையில், சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமலும், தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லாததாலும், குழியான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக அந்தக் குழியில் விழுந்து உயிரிழந்தான்.

இந்த நிலையில், சிறுவனின் மரணத்திற்கு அன்னூர் பேரூராட்சியின் அலட்சிமே காரணம் எனக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர் தலைமையில் ஏராளமானோர் திரண்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் பேச்சுவார்தை நடத்தி, பலியான சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடந்து, போராட்டம் கைவிடப்பட்டது.