கோவை: உலக நன்மைக்கு வேண்டி கோவையில் அரச மற்றும் வேப்ப மரங்களுக்கு, மனிதர்களுக்கு நடைபெறுவது போன்று கோலாகலமான திருமணத்தை ஊர் பொதுமக்கள் செய்து வைத்தனர்.
கோவை: உலக நன்மைக்கு வேண்டி கோவையில் அரச மற்றும் வேப்ப மரங்களுக்கு, மனிதர்களுக்கு நடைபெறுவது போன்று கோலாகலமான திருமணத்தை ஊர் பொதுமக்கள் செய்து வைத்தனர்.
கோவை விமான நிலையம் அருகேயுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அரசமரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைப்பது என பிருந்தாவன் நகர், பூங்கா நகர், சித்ரா ஆகிய பகுதிகளை சேர்ந்த ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, திருநிறை செல்வன் அரசன் என்கிற அரச மரத்திற்கும், திருநிறை செல்வி வேப்பம்மை என்கிற வேப்ப மரத்திற்கும் சித்ரா பெளர்ணமி நாளில் திருமணம் நடக்க உள்ளதாகத் திருமண பத்திரிக்கை அடிக்கப்பட்டது. இந்தப் பத்திரிக்கையினை வீடு வீடாகச் சென்று இருவீட்டார் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் ஊர்மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆண் வீட்டார், பெண் வீட்டார் தனித்தனியாக மேளம், தாளங்கள் முழங்கச் சீர்வரிசைகளை எடுத்து வரப்பட்டு, நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இதன்பின்னர், ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது போல, வேப்ப மரம் மணப் பெண்ணாகவும், அரச மரம் மணமகனாகவும் அலங்கரிக்கப்பட்டது. அரச மரத்திற்கு பட்டு வேஷ்டியும், வேப்ப மரத்திற்குப் பட்டு புடவையும் அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹோமகுண்டம் வளர்த்தப்பட்டு, வேத மந்திரங்கள் ஓத வைதீக முறைப்படி திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், மேளதாளம் முழங்க மாலை மாற்றியும், தாலி கட்டியும் அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் சீரோடும், சிறப்போடும் வெகு விமர்சையாக நடத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து கோவில் நிர்வாகி சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, " ஊர்மக்கள் விருப்பத்தின் பேரில் 20 வயதான அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாணம் மக்கள் ஆதரவுடன் வெகு விமர்சையாக நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் பழங்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் ஒரு அரிதான நிகழ்ச்சி. துன்பம் போக்கி நன்மையை மக்களுக்கு அருள வேண்டுமென்பதற்காகவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், மழை பெய்து ஊர் மற்றும் விவசாயம் செழிக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்கவும், குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தை பாக்கியம் பெறவும், சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் உறவு மேம்படவும், தொழில் அபிவிருத்தி அடையவும் இந்தத் திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது." என்றார்.
மேலும், ஊர் மக்கள் சார்பில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊர் மக்களுக்கு இருவீட்டார் சார்பாக விருந்து அளிக்கப்பட்டது. கோவை நகரப் பகுதிக்குள் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் வெகு விமர்சையாக திருமணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், நகரங்களிலும் மக்களின் பழமையான நம்பிக்கைகள் இன்னும் நீர்த்து போகவில்லை என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துகாட்டுவதாக உள்ளது.