சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரம், தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை நியமித்தது, பாலியல் புகாரில் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி சிக்கியுள்ளது போன்ற சூழ்நிலைகள் நடுவே இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
பதவியேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் மாளிகையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு திணறினார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார் ஆளுநர்.

இந்த சூழலில், தனது பேத்தியிடம் நடந்து கொள்வதைப் போல் ஒரு மாநிலத்தின் ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்ற கேள்வியெழுந்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய இந்த சூழலில் ஆளுநர் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழகத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
