கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு சரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நொய்யல் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வரும் போது சமூக ஆர்வலர்கள் லாரியைப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பேரூர் பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரிகள் செயல்படுவதாகவும் செய்திகளில் வெளியானது. மேலும், மது விற்பனையும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து கோவை மாவட்ட சிறப்பு பிரிவினர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி, போலி மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக செய்திகளில் வெளிவருகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை புறநகர் மாவட்ட பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் குறித்த அறிந்தால், 94458-46282 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை அளிக்கலாம். இதில் தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தர வேண்டியது இல்லை, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.