மேட்டுப்பாளையம்: பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப் பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது பண்ணை நிர்வாகம்.
மேட்டுப்பாளையம்: பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப் பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது பண்ணை நிர்வாகம்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழமையான பழப் பண்ணை உள்ளது. நீலகிரி மலைக்காட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் சீரான சீதோஷன நிலை காரணமாக அந்த பழப் பண்ணையில் துரியன் பழம், முட்டைப்பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல அரிய வகை பழங்கள் ஏராளமாக விளைந்து வருகின்றன.
தற்போது பலா சீசன் துவங்கியுள்ள நிலையில் அங்குள்ள உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட பலா மரங்களில் பலாப்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.
மேலும், அவை பழுக்கத் தொடங்கியுள்ளதால், அதில் இருந்து வீசும் வாசனையால் ஈர்க்கப்பட்டு காட்டு யானைகள் பண்ணையை முற்றுகையிட தொடங்கியுள்ளன. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட கம்பி வேலிகளை துண்டித்துவிட்டு பண்ணைக்குள் நுழையும் யானைகள் மரங்களில் உள்ள பலாப்பழங்களை பறித்து உண்ணுகின்றன.
உயரமாக வளரும் தன்மையுள்ள பலா மரங்களில் பழங்களை தனது துதிக்கையால் பறிக்க இயலாவிட்டால், மரங்களை சாய்த்து விட்டு அதில் உள்ள பழங்களை ருசிக்கத் தொடங்கிவிடுகின்றன காட்டு யானைகள்.
மேலும், பண்ணையைச் சுற்றியுள்ள வனத்தில் இருந்து வரும் குரங்கு கூட்டங்கள் அங்கேயே முகாமிட்டு பலாப்பழங்களை கடித்து சேதப்படுத்துகின்றன. யானை மற்றும் குரங்குகளால் பலா மரங்கள் மட்டுமின்றி அங்கு வளர்க்கப்பட்டு வரும் பிற வகை அரிய வகை மரங்களும், செடிகளும், விற்பனைக்காக தயாராகும் மூலிகை மற்றும் மலர் நாற்றுக்களும் சேதமடைந்து வருகின்றன. மேலும், அப்பண்ணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளும் வருவதால், வனத்துறையினரின் ஆலோசனைப்படி பண்ணையில் உள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை அகற்றும் பணியை பண்ணை நிர்வாகம் துவங்கியுள்ளது.

இதற்காக கல்லார் பழப் பண்ணையில் பழுக்கும் நிலையில் உள்ள பலாக்களை பறித்து விற்பனை செய்துகொள்ள முதல் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது, மரங்களில் இருந்து பழங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.