கோவை: காந்திபார்க் பகுதியில் ரூ. 1.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
கோவை: காந்திபார்க் பகுதியில் ரூ. 1.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

மாநகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு காந்தி பூங்கா பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த நீச்சல் குளத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்காக மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 1.87 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை இன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
தற்போது அந்த நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 12 அடியாக ஆழமாக இருந்த நீச்சல் குளம் 4.5 அடியாக மாற்றப்பட்டது. மேலும், 12.6 மீட்டர் அகலத்திற்கும், 25.6 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கென இரண்டடி ஆழத்தில் குட்டி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய நீச்சல் குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.50-ம் சிறிய நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை விடப்பட்டுள்ள இந்த நேரத்தில், நீச்சல் குளம் திறக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.