கோவை: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டக்கல்லூரி-க்கு பி.யு.சி.எல் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டக்கல்லூரி-க்கு பி.யு.சி.எல் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. இவர், புரட்சிகர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து பேசும்படி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் பேச முன்வராத நிலையில், மாணவி பிரியா-வை ஏதாவது ஓரு தலைப்பில் பேசும்படி ஆசிரியர் கூறினார். இதில், மாணவி பிரியா காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அங்கு வந்த உதவி பேராசிரியர் மாணவியை திட்டியுள்ளார். மேலும், ஆசிரியரையும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் பேச்சு குறித்து வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் சிலரும், உதவி பேராசியரும் முதல்வரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவி பிரியா-வை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர்களுக்கு இடையே பாலினம் மற்றும் மதரீதியாக மோதல் ஏற்படும் வண்ணம் பேசியதாலும், அதை கேட்கச் சென்ற ஆசிரியையை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியான மோதல் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் மாணவியை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் கோவை சட்டக்கல்லூரி-க்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை சட்டக்கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், "பிரியா-வின் கருத்துக்கள் அவரது பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட அல்லது குழுவின் பார்வையாக இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், சட்ட கல்லூரி நிர்வாகம் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளி என்று முத்திரை குத்தியுள்ளது. இது பெண்ணிய குரல்களை மௌனமாக்கும் செயலாகும். உங்கள் செயலுக்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு, பிரியா இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்." என்று கூறியுள்ளார்.