கோவை : அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.
கோவை : அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.
கோவை பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திராவிடர் கழகத்தினர், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகளை அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த பின் எடுத்துக் கொண்டனர்.
சி.பி.ஐ.எம்.எல் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தும், அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மாலை அணிவித்தனர்.

இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் சமூக நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹிரன், அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, அரசு ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்கள் விடுதிகளுக்குப் புத்தகங்களை வழங்கினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் என். ஜெயக்குமார், பதிவாளர் பொறுப்பு பி. வனிதா ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக எஸ்.சி. எஸ்.டி சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.