கோவை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கோவை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் நேற்று துவங்கியது. ராணுவ கண்காட்சியை முறைப்படி துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னையில், தி.மு.க தலைமை அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மேலும், அக்கட்சியின் அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள விளம்பரப் பலகை மீது ஏறி கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் மூலம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.

கோவை
கோவையில், பீளமேடு, இராமநாதபுரம், குனியமுத்தூர், கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் பகுதியில் ஏற்றப்பட்ட கருப்பு கொடிகளை அகற்றக் கோரி காவல் துறையினர் நிர்ப்பந்திப்பதாக அப்பகுதி தி.மு.க-வினர் குற்றம் சாட்டினர். இதேபோல், சித்தாபுதூர் பகுதியில் பகுதியில் ஏற்றப்பட்ட கொடிகளை அகற்ற போலீசார் முயன்றதைத் தொடர்ந்து, தி.மு.க-வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதி வார்டு செயலாளர் சசிக்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கருப்பு உடை
ரயில் நிலையங்களுக்கு கருப்பு உடை அணிந்து வருபவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதனால், எதேர்ச்சையாக கருப்பு உடை அணிந்து வந்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.