பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து கோவைக்கு பொள்ளாச்சி வழியாக தினம் தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு கிளம்பிய ரயில் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பு உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வீதி வழியாக வரும் தண்டவாளத்தில் பலத்த சத்தத்தோடு வெடி வெடித்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளத்தைப் பார்த்த போது பட்டாசு வெடித்தது தெரியவந்தது. பெரும் சேதம் இல்லாததால் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது வெடித்த இடத்தில் பாஸ்பரசால் தயாரான சிறிய குண்டுகளும், வெடி மருந்தும் இருந்தது தெரியவந்தது.

பின்னர், அதன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். குறைந்த சக்தி வாய்ந்த வெடி வெடித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 300-க்கு மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததா? அல்லது காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனை எதிர்ப்பு தெரிவிக்க மர்ம நபர்கள் இதைச் செய்தார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் பட்டாசு வெடித்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.