சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம் விஸ்ரூபமெடுத்துள்ள நிலையில், மைதானத்தைச் சுற்றி குட்டி விமானத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம் விஸ்ரூபமெடுத்துள்ள நிலையில், மைதானத்தைச் சுற்றி குட்டி விமானத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து, மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் சேப்பாக்கம் செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஓட்டலில் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர். பல்வேறு போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. மேலும், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஐ.பி.எல்., போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிரிக்கெட்டை காண வரும் ரசிகர்கள் மொபைல் போனை கொண்டு வரலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை அந்த அணியின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., போட்டிக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

பலத்த போராட்டத்திற்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அணியின் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
போராட்டக்குழு முற்றுகையிடலாம் என சென்னை சேப்பாக்கம் முழுவதும் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். பல்வேறு தரப்பினர் போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் சீமான், பாரதிராஜா, வைரமுத்து, வெற்றிமாறன், தங்கர் பச்சான், கவுதமன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். தடுப்புகளை தள்ளிவிட்டு வாலாஜா சாலைக்குள் நுழைந்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
"தமிழர்களின் உணர்வை மத்திய அரசு அவமதிக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள், எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே இந்தப் போராட்டம்," என சீமான் கூறினார்.