கோவை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடைபெறவுள்ள கருப்புக்கொடி போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான வாசுகி தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடைபெறவுள்ள கருப்புக்கொடி போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமான வாசுகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மேட்டுப்பாளையம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
காவிரி நீரில் தமிழகத்திற்கான உரிமையைப் பெற அரை நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவினை உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே செயல்படுத்த மறுக்கின்றது மத்திய அரசு. தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தைப் புறக்கணித்துவிட்டு கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தமிழகத்தை வஞ்சித்த பிரதமர் மோடி இதே தமிழகத்திற்கு வருகை தரும் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டும் போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் பங்கேற்கும். காவிரி விவகாரம் மட்டுமின்றி தமிழகத்தின் பாசன பகுதிகளை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக மாற்றி ஹைட்ரோ கார்பன் லைசன்ஸ் என்ற ஒரே லைசன்ஸ் கொடுத்து எதை வேண்டுமென்றாலும் எடுக்கலாம் என்ற முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது.
காவேரி பாசனப் பகுதியை பாலைவனமாக்கி இப்பிரதேசத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது தான் மத்திய அரசின் நோக்கம்.
இது ஒரு மிகப்பெரிய சதி வலைப்பின்னல் என கருதுகின்றோம். எனவே இவை இரண்டுக்கும் சேர்த்து தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதி நிலையில் இருக்கும் போது இங்கே நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை சிறிது காலம் தள்ளிப் போடலாம் என்பதே எங்களது நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.