கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள பேமலி பார் சில்ட்ரன்ஸ் என்ற தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஒரு சாரார் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது :- தனியார் தொண்டு நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு கனடாவிலிருந்து நிறுவன தலைவர் சாண்ட்ரா சிம்சன் நிதியனுப்பி வருகிறார். ஆனால், குழந்தைகள் மையத்திற்கு வரும் பணத்தை முறைகேடாக ஊழல் செய்கின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான ஊழியம் வழங்காமல், அதிகளவு பணி சுமை கொடுத்து துன்புறுத்துகின்றனர். மேலும், இந்த தொண்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பின் பொறுப்பில் உள்ள ஜெகதீஸ்வரி, கலைசெல்வி ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அங்கு 68 பேர் பல்வேறு பணிகளில் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளைக் கவனிக்க 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவர் இருக்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் ஊழியர்கள் குற்றசாட்டு எழுப்பியபோது, பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை," எனத் தெரிவித்தனர்.