மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் போது ஜெயலலிதா அதிகாரிகளுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் போது ஜெயலலிதா அதிகாரிகளுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பில்லை என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தற்போதைய தமிழக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஊடகங்கள் வேண்டுமென்றே தன்னை புறக்கணித்து வருகின்றன. காவிரி மேலாண்மை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தங்களது பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அறவழி போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். தற்போதைய அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் போட்டியிடுவோம்.
முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்தது போல, அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா அதிகாரிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆணையத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு முரண்பட்ட தகவல்களையே கூறி வருகின்றனர். தமிழக அரசின் தலையீடு இல்லாமல் விசாரணை ஆணையம் செயல்படவேண்டும் அல்லது சி.பி.ஐ., மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை வெளிவரும்,” என்றார்.
ஊடகங்களை தாக்கி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “ஆரம்ப கட்டத்தில் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியதே ஊடகங்கள் தான். ஆனால், சில ஊடகங்கள் தற்போது என்னைப் புறக்கணித்து வருகின்றன என்பதோடு என்னை பற்றிய எதிர்மறை செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன,” எனக் கூறினார்.