கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவை உக்கடம் பகுதி மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று மீன் மார்கெட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. மீன் வியாபாரிகளின் இந்த போராட்டம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்த மீன்கள் வீணானதுடன், வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனை சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு விதிக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
