கோவை : விவசாயிகளையும், நுகர்வோர்களையும் நேரடியாக ஒருங்கிணைக்கும் 'நம்ம ஊரு சந்தை' வரும் ஞாயிற்றுக்கிழமை நமது கோவையில் முதல்முறையாக நடக்கிறது.
கோவை : விவசாயிகளையும், நுகர்வோர்களையும் நேரடியாக ஒருங்கிணைக்கும் 'நம்ம ஊரு சந்தை' வரும் ஞாயிற்றுக்கிழமை நமது கோவையில் முதல்முறையாக நடக்கிறது.
தொழில்நுட்பமும், இடைத்தரகர்களும்
நவீன காலத்திற்கேற்ப நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் மட்டுமின்றி அடிப்படை தேவையான உணவு உள்ளிட்டவற்றிலும் தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு எல்லாம் விவசாயப் பயிரை விளைச்சலுக்குப் போடும் விவசாயி, அதன் பலனைப் பெற பல நாட்கள், பல மாதங்கள்...அவ்வளவு ஏன்..? பல ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டியிருந்தது. இவ்வளவு நாட்கள் காத்திருந்தாலும், அதன் மூலம் பெறப்படும் தானியங்கள், பயிர்கள் 100 சதவீதம் சுகாதாரமாகவும், மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கும் வகையில் அதீத சத்துக்களை பெற்றிருந்தன.
ஆனால், தற்போதுள்ள நவீன காலத்தில் பயிரை விதைத்து விட்டு தூங்கி எழுந்தால், பயிர்கள் அறுவடைக்கு ரெடி.., சுவிட்ச் போட்டால் உணவு தயார் என்ற பரிணாமங்களில் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. என்னதான் நேரம் மீதமாகின்றது என்பதற்காக நவீன காலத்தில் நாம் ஒன்றிப் போயிருந்தாலும், இந்தக் காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் வாழ்நாள் என்னமோ.. 60 ஆண்டுகள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இயற்கையாக விளைவிக்கக் கூடிய விவசாயப் பொருட்கள் நுகர்வோரை சென்றடைவதற்குள் ஆயிரக்கணக்கான இடைத்தரர்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. கஷ்டப்பட்டு உழைத்து அறுவடை செய்யும் விவசாயியோ, அந்தப் பொருளை வாங்கி நுகர்வோரும் இதில் நட்டத்தையே சந்திக்கின்றனர்.
மாற்றத்திற்கான தொடக்கம் 'நம்ம ஊரு சந்தை'
எனவே, இந்த நிலையை மாற்றி, விவசாயிகளையும், நுகர்வோர்களையும் நேரடியாக ஒருங்கிணைக்கும் 'நம்ம ஊரு சந்தை' என்ற முறையை இயல்வாகை சூழலியல் உருவாக்கியுள்ளனர். திருப்பூரில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சந்தைமுறை, சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகளையும், நுகர்வோர்களையும் ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்டதே 'நம்ம ஊரு சந்தை'. உழவர்களுக்கான நேரடி விற்பனை மையமாக எங்கள் சந்தை செயல்படுகிறது. நல்ல வாழ்வியலுக்கான, சமூக மாற்றத்துக்கான தொடக்கமாக இது அமையும் என நம்பப்படுகிறது.
விற்பனைக்கு
பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், வெங்காயம், தக்காளி உட்பட அனைத்து நாட்டுக் காய்கறிகள், கருப்பட்டி, தேன், கற்றாழை ஊறுகாய், வேப்பம்பூ ஊறுகாய், கீரை வகைகள், நாட்டு மாதுளை, வாழை, செவ்வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகள், இனிப்புகள், மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், குளியல் பொடி, நாட்டுக்கோழி, இறால் ஊறுகாய், கணவாய் ஊறுகாய் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மந்தாரை இலைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்ட இறால், கணவாய் உள்ளிட்ட ஊறுகாய் வகைகள்.
பழங்காலத்து சந்தைமுறை
வாடிக்கையாளர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற நம்ம ஊரு சந்தையானது, பழங்காலங்களில் சந்தைகளில் பொருட்கள் எந்த மாதிரியான கட்டமைப்புகளில் விற்கப்பட்டதோ..? அது போன்ற சூழலில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நடக்கும் நம்ம ஊரு சந்தையில், கடந்த 4 மாதத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.
பிளாஸ்டிக் இல்லை
'நம்ம ஊரு சந்தை'யில் பேக் செய்யப்பட்ட பிராண்டட் பொருட்கள் கிடையாது. பாலித்தீன், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லை. எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பொருட்கள் வாங்க வருபவர்கள் பாத்திரம், தூக்குவாளி, கட்டைப்பை, துணிப்பைகளைக் கொண்டு வந்து வாங்குகின்றனர்.
கோவையில் 'நம்ம ஊரு சந்தை'
திருப்பூரில் பெரும் வரவேற்பைப் பெற்ற நம்ம ஊரு சந்தையானது, கோவை மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக கோவையில் 'நம்ம ஊரு சந்தை' அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.,08) வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த சந்தையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது வேளாண் பொருட்களை விற்பனைக்கு வைக்கின்றனர்.
இதன் ஒருபகுதியாக, குழந்தைகள். பெரியவர்களுக்கான மரபு விளையாட்டுக்களும், சூழல் நாடகமும் அரங்கேற்றப்படுகிறது. மேலும், வீடு துடைக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, கழிப்பறை சுத்தம் செய்யும் அழுக்கு நீக்கிகள் தயாரிப்பு குறித்த தற்சார்பு பயிற்சி பட்டறை மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, யுனிவர்செல் அகாடமி ஆப் அக்குப்பஞ்சர் சயின்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இயற்கை வாழ்வியல் முறை
இதுகுறித்து இயல்வாகை அமைப்பைச் சேர்ந்த அழகேஸ்வரி பேசுகையில், "விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நுகர்வோரிடம் நேரடியாக சென்றடையச் செய்வதையே 'நம்ம ஊரு சந்தை' மையமாகக் கொண்டுள்ளது. இதில், இயற்கை உற்பத்தியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், நாட்டுரக உற்பத்தி பயிர்கள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பயிர்கள் ஆகியன இடம்பெறுகின்றன. இது பொருட்களை விற்பனை செய்வதற்கான இடமல்ல. இயற்கை வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டது," என்றார்.