சட்டவிரோதமாக மானை வேட்டையாடியதாகக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமாக மானை வேட்டையாடியதாகக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ''ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்'' என்ற இந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சல்மான்கானை விடுதலை செய்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு சல்மான்கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், மார்ச் 28-ம் தேதி விசாரணை நிறைவடைந்தன. வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேவ்குமார் காத்ரி ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து, சில மணிநேரத்திற்குப் பின்னர் சல்மானுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார். 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.