கோவை: கோவைக்கு சேரன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
கோவை: கோவைக்கு சேரன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், யானைகளின் பணிக்காலம் முடிந்து ஆனைமலை அடுத்த வரகலியாருக்கு பாரியும், முதுமலையை அடுத்த தேக்கம்பட்டிக்கு சுஜயும் அனுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலாக சேரன் (32) மற்றும் ஜான் (27) என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து நேற்று கோவைக்கு அழைத்து வரப்பட்டன.
இது குறித்து மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில், " சுஜய் மற்றும் சேரன் என்ற இரண்டு யானைகள் கூடலூரில் வன விலங்குகள் மற்றும் மனித மோதல்களைத் தடுக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை இரண்டும் திருப்பி அனுப்பப்பட்டு புதிய கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன." என்றார்.

தற்போது கோவை வந்துள்ள இரண்டு புதிய கும்கிகளின் நினைவாக இரண்டு ஆலமர கன்றுகளை வனத்துறை மருத்துவர் மனோகர் நடவு செய்தார். அந்த யானைகளுக்கு தர்பூசணி, பாலப்பழம், வைக்கோல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன.