கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார்.
கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார்.

சுங்கம் பைப்பாஸ் சாலையை சேர்ந்தவர் மரியதாஸ்(51). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி விக்டோரியா. இன்று அதிகாலை இவர்கள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி மரியதாசின் வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விக்டோரியா பரிதாபமாக பலியானார். மரியதாஸ் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விக்டோரியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மரியதாசை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அடிக்கடி சுங்கம் பைபாஸ் சாலையில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு சுவர் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.