காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, குவாட்டரும், கோழி பிரியாணியையும் பறக்க விட்ட அ.தி.மு.க. தொண்டர்களால், போராட்டக்களம், விருந்து திடலாக மாறியது.
காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, குவாட்டரும், கோழி பிரியாணியையும் பறக்க விட்ட அ.தி.மு.க. தொண்டர்களால், போராட்டக்களம், விருந்து திடலாக மாறியது.
காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

முதலில் உணர்ச்சி மிகு போராட்டமாக தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் போகப் போக விருந்து திடலாக மாறியது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்கத் தொண்டர்கள் கட்சியின் சொந்த செலவில் பேருந்து வைத்து அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியிலேயே பேருந்துகள், மதுக்கடை மற்றும் ஓட்டல்களில் நிறுத்தப்பட்டு, போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு தேவையான உடைமைகளை வாங்கிக் கொண்டதுடன், முழு குடிமகனாகவும் மாறியதாகத் தெரிகிறது. பின்னர், போராட்ட அரங்கில் சக தொண்டர்களுடன் இணைந்து ஏப்பம் வருவதைக் கூட அறியாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக் களத்தில் நீண்ட நேரம் அமர்ந்ததால், ஏற்பட்ட கலைப்பினை போக்க, சிலர் தங்களது கரை வேட்டியை மடித்துக் கொண்டு நேராக டாஸ்மாக் சென்று பொழுதினை போக்கியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, உண்ணாவிரதப் போராட்டத்தில் தொண்டர்கள் பலரும் வேர்க்கடலை, சமோசா, மிச்சர், முறுக்கு என வாய்க்கு ருசியாக நொறுக்குத் தீனி சாப்பிட்டு வந்ததும் அங்கிருந்த நிரூபர்களின் கண்களின் அகப்பட்டுவிட்டது. இதுமட்டுமில்லாமல், துள்ளுவதே இளமை.. தேடுவதோ தனிமை.., ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.., போன்ற பாடல்களுக்கும் தொண்டர்கள் உற்சாக நடனம் ஆடியுள்ளனர்.
இன்றைய உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, காலையில் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் தொடங்குகிறார்கள். இதெல்லாம் ஒரு உண்ணாவிரதமா.. உண்மையான அக்கறை இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் என நெட்டின்சன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க., இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அனைத்தும் நெட்டின்சன்களின் கூற்றை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் விதமான காவிரி நீர் விவகாரத்தில் உணர்ச்சி மிகுந்து போராட வேண்டிய வேளையில், ஜாலியான போராட்டமாக மாறியிருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.