கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதுக்கடையில் குவிந்த அ.தி.மு.க.,வினரை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதுக்கடையில் குவிந்த அ.தி.மு.க.,வினரை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக, கோவையில் ஊரக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காந்திபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆண்கள், மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் கட்சி வேட்டியுடன் மது அருந்தினர். இது குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் படம் பிடிக்க சென்றனர். இதனைப் பார்த்த குடிமகன்கள் படம் பிடித்த செய்தியாளர்கள் மீது, மது பாட்டில்களை வீசியும், செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் ஒட்டம் பிடித்தனர்.
காவிரி நீருக்காக நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் போதே அ.தி.மு.க.,வினர் மது அருந்தியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் உற்சாக பானத்தோடு நடந்து வருவதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதேபோல, காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ரயில் நிலையம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அவ்வாறு, அழைத்து வரப்பட்டவர்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் பகுதியிலேயே மதுஅருந்தி உணவு உட்கொண்ட பிறகே போராட்டத்தில் பங்கெடுத்தனர். இது போராட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.