சென்னை : சமீபத்தில் திருச்சியில் போலீசாரின் வாகனத் தணிக்கையின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியினரின் வாகனத்தை போலீசார் உதைத்ததில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, பெண் உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை : சமீபத்தில் திருச்சியில் போலீசாரின் வாகனத் தணிக்கையின் போது, ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியினரின் வாகனத்தை போலீசார் உதைத்ததில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, பெண் உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டார்.
இருந்த போதும், காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில், மீண்டும் போலீசாரின் அத்துமீறல் சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.
தி.நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற வாலிபர், இருசக்கர வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கையோடு சென்றுள்ளார். 3 பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும், ஹெல்மெட் அணியாத காரணத்தாலும், போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தியதோடு, சட்டையைப் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது, 'என் மகனை விடுங்கள்' என பிரகாசின் தாய் ஆய்வாளரைத் தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், உதவி ஆய்வாளர்கள் இருவர் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள், திருச்சி சம்பவத்திற்கும் பின்பும் போலீசார் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், அவர்கள் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிரகாசின் தாயை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர்? என்று சமூக வலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரகாஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.