காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் : காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "காவிரி பிரச்சினைக்காக மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி உரிமையை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. அதேவழியில் நடைபெறும் இந்த ஆட்சியும் காவிரி உரிமையை மீட்டெடுக்கும். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தால் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை அமைக்கும்." என்றார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் 800 மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளது இதனால் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.