கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சிக்காததால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளுமாறு பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரனுக்கு கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கொரியர் மூலம் எலி மருந்து அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், தற்கொலை செய்து கொள்ளுமாறு அ.தி.மு.க., எம்.பி., மகேந்திரனுக்கு சமூக ஆர்வலர் கொரியர் மூலம் எலி மருந்து அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அ.தி.மு.க., அரசு எடுக்கவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

உச்சகட்டமாக, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாவிட்டால், தற்கொலை செய்து கொள்வதற்கும் தயாராக உள்ளதாக அ.தி.மு.க., எம்.பி. நவநீதகிருஷ்ணன் அதிரடியாகப் பேசினார். இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.பி.க்கள் 3 பேரும் எம்.எல்.ஏ ஒருவரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனக் கூறினர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த பெரியார்மணி என்ற சமூக ஆர்வலர் பொள்ளாச்சியைச் சேர்ந்த எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- தமிழக மக்களின் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை. அவர்கள் பதவியை வைத்து தமிழக மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் அரசியலுக்காக மட்டுமே பேசி வருகின்றனர்.
இவர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆகவே, நாடாளுமன்றத்தில் பேசியதை போல உயிரைக் கொடுக்கட்டும் என வலியுறுத்தி எங்களது தொகுதி எம்.பி.க்கு எலிமருந்தை அனுப்பியுள்ளேன், எனக் கூறினார்.