கோவை: அனைவருக்குமான சமநீதி கிடைத்திடும் வகையில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை: அனைவருக்குமான சமநீதி கிடைத்திடும் வகையில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சட்ட உதவி முகாம் இன்று நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் குலுவாடி ஜி.ரமேஷ் கலந்து கொண்டு சட்ட சேவை வழங்கும் முகாமினையும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்தியாவில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அனைவருக்கும் சமநீதி கிடைக்கவும், சட்டப்பணிகள் ஆணையத்தின் நோக்கமானது, ஏழைகள், எழுத்தறிவு இல்லாதவர்கள் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்ட உதவி அளித்திடுவதுடன், கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் பெற வேண்டிய நீதியை வாதாடிப் பெற்றுத்தருவதாகும்.

இம்முகாம் மலைவாழ் மக்களிடையே நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனேனெனில் அரசின் திட்டங்களும், சட்டநுணுக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகம் இல்லாதவர்கள் மலைவாழ் மக்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளை அமைத்து உள்ளது பாராட்டுதலுக்குரியது. இப்பகுதி மக்கள் இம்முகாமினை சிறப்பாக பயன்படுத்தி சட்டத் தெளிவு பெறுவதுடன், அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வையும் பெறும்படி, கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறினார்.

தொடர்ந்து, இம்முகாமில் வருவாய்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 9,07,000 -க்கான கசோலைகளை வழங்கினார்.