கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அரசு மருத்துவமனையை ஒட்டி தனியார் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், அந்த வணிக வளாக கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வணிக வளாக கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ஆறு மாதங்கள் கடந்தும் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் கடைகள் இயங்கி வந்தது. மேலும், கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால், உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.
இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும், அங்கு கடை வைத்துள்ளவர்களுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தை சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.