கோவை : கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ. 93.60 லட்சம் மதிப்பிலான 52 பேட்டரி வண்டிகளின் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவை : கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ. 93.60 லட்சம் மதிப்பிலான 52 பேட்டரி வண்டிகளின் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கத்திற்கென ரூ. 10.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில், முதற்கட்டமாக மாநகராட்சியின் வார்டுகளிலுள்ள குடியிருப்புகளில் வீடு வீடாகச் சென்று தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளை சேகரம் செய்ய ரூ. 93.60 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் மூலம் இயக்கப்படும் 52 வண்டிகள் வாங்கப்பட்டன. இதனை மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், பேட்டரி வாகனத்தில் அமர்ந்து வாகனத்தை இயக்கி பணிகளை எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார். சாதாரண தள்ளுவண்டியால் 150 வீடுகள் செல்ல முடியும். இந்த பேட்டரி வண்டி 500 வீடுகளுக்கு சென்று திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளப் பணியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார் (கோவை வடக்கு), அம்மன்.கே.அர்ச்சுணன் (கோவை தெற்கு), வி.சி. ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), ஏ. சண்முகம் (கிணத்துக்கடவு), துணை ஆணையாளர் ப. காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் என். நடராஜன், செயற்பொறியாளர்கள் ஏ.லட்சுமணன், ஞானவேல், கே. சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.