மானிய விலையில் கொடுக்கப்படவுள்ள ஒரு லட்சம் நாற்றுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப்பண்ணை கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம்: மானிய விலையில் கொடுக்கப்படவுள்ள ஒரு லட்சம் நாற்றுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப்பண்ணை கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான கல்லார் அரசு பழப்பண்ணையில் மங்குஸ்தான், ரம்பூட்டான், துரியன், பலா உள்ளிட்ட பல்வேறு விதமான பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சீசனுக்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் இவைகளை சார்ந்த பழ நாற்றுகள் மற்றும் குறுமிளகு, பாக்கு, தேயிலை, கருவேப்பிலை, எலுமிச்சை, ஜாதிக்காய் உள்ளிட்ட பல விதமான விவசாயிகளுக்குப் பயன்பெறும் நாற்றுகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இந்தப் பண்ணையில் ஏற்கனவே பதியம் செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மூலம் தயார் செய்த ஒரு லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஆண்டு முழுவதும் சீரான சீதோஷண நிலையில் தயாரிக்கப்படும் நாற்றும் மிக நன்கு வேகமாக வளரக் கூடியவையாகக் கருதப்படுகிறது. வெளிச்சந்தைகளை விட சுமார் 50 சதவீத மானிய விலையில் அளிக்கப்பட்டு வரும் இந்தப் பண்ணையில் பாக்கு, கருவேப்பிலை, தேயிலை, குறுமிளகு, எலுமிச்சை, ஜாதிக்காய் என 15 வகையான நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் பலா, மங்குஸ்தான், லிச்சி, பப்ளிமாஸ் உள்ளிட்ட பழவகை நாற்றுகளும் தயாராக உள்ளன.
இதனை கோவை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் வாங்கி பயனடையலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.