டெல்லி: காதலித்து திருமணம் செய்தவர்களை கட்டப் பஞ்சாயத்து நடத்தி பிரித்து வைப்பது சட்ட விரோதம் என்றும், காதல் திருமணம் செய்தவர்களை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லி: காதலித்து திருமணம் செய்தவர்களை கட்டப் பஞ்சாயத்து நடத்தி பிரித்து வைப்பது சட்ட விரோதம் என்றும், காதல் திருமணம் செய்தவர்களை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சக்தி வாகினி என்ற தனியார் அமைப்பு கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் போது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில், கிராமங்களில் செயல்படும் பஞ்சாயத்து அமைப்புகள் காதல் திருமணத்தில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், அவ்வாறு திருமணம் செய்தவர்களை பிரித்து வைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், ஆணவ கொலையை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
அந்த தீர்ப்பின் விவரங்கள் பின்வருமாறு:-
- திருமண வயதையடைந்த ஒரு ஆணும், பெண்ணும் சாதி வேறுபாடு பார்க்காமல் திருமணம் செய்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை. இதில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது.
- அவ்வாறு திருமணம் செய்தவர்களை மூன்றாம் நபர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து அல்லது சாதி பஞ்சாயத்து நடத்தி பிரித்து வைப்பது சட்ட விரோதம்.
- அவர்களை வன்முறையின் மூலமோ, மிரட்டியோ பிரித்து வைப்பது கூடாது.
- காதலித்து திருமணம் செய்தவர்களை கேள்வி கேட்க சமூகத்திற்கோ, கட்டப்பஞ்சாயத்திற்கோ உரிமை இல்லை.
- சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தை நாடினால் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.