திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாவதைக் கண்டித்து வாலிபர் ஒருவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் வீணாவதைக் கண்டித்து வாலிபர் ஒருவர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக அந்த குழாயில் இருந்துய் 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தேவபாலன் என்ற வாலிபர் சம்பந்தப்பட்ட இடத்தில் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், "நீரின்றி அமையாது உலகு, சிறுதுளி பெருவெள்ளம், மழை நீரை சேமிப்போம், குடிநீரை பாதுகாப்போம்" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்களும் அவருக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து தேவபாலன் கூறுகையில், "எனது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கே போராடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி தண்ணீரை போராடி பெற்று வரும் நிலையில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் குடிநீர் வீணாகி வருவது வேதனையாக உள்ளது. குறிப்பாக இந்த இடத்தில் கடந்த பல மாதங்களாக 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இந்த சாலை வழியாக உயர் அதிகாரிகள் பலர் சென்று வந்தும் இதுவரை இந்த பிரச்சனைக்கு.தீர்வு காணப்படவில்லை. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்." என்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தேவபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, தேவபாலன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.