அதிகளவு வருமானம் தரக்கூடியது என்பதால், மலைதோட்ட காய்கறிகளுக்கு மாற்றுப் பயிரான சைனீஸ் காய்கறிகளை நீலகிரி விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரி: அதிகளவு வருமானம் தரக்கூடியது என்பதால், மலைதோட்ட காய்கறிகளுக்கு மாற்றுப் பயிரான சைனீஸ் காய்கறிகளை நீலகிரி விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு சமவெளி பிரதேசங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மலை காய்கறிகளுக்கு மாற்றுப் பயிராக கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த கொய்மலர் சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்காத நிலையில், தற்போது, இந்த கொய்மலர் சாகுபடிக்காக அமைக்கப்பட்ட பசுமை குடில்களை சைனீஸ் காய்கறிகளான செல்ரி, புருக்கோலி, சைனீஸ் கேபேஜ், ஐஸ்ப்ரூக், ரோமன் உள்ளிட்ட 18 வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளையும் சைனீஸ் காய்கறிகளை, சென்னை, ஐதராபாத், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்த விவசாயத்திற்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், தற்போது நீலகிரி மாவட்டம் கிராமப் பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளை விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். தற்போது நல்ல மகசூல் கொடுத்து வரும் இந்த வகை காய்கறிகளை, வரும் காலங்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.