கோவையில் நடைபெற்று வரும் தென்மண்டல அளவில் பெண்களுக்கான வாலிபால் போட்டியின் 2-வது நாள் ஆட்டங்களில் காருண்யா மற்றும் ஜே.பி,ஆர் அணிகள் வெற்றி பெற்றன.
கோவை: கோவையில் நடைபெற்று வரும் தென்மண்டல அளவில் பெண்களுக்கான வாலிபால் போட்டியின் 2-வது நாள் ஆட்டங்களில் காருண்யா மற்றும் ஜே.பி,ஆர் அணிகள் வெற்றி பெற்றன.
தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கேரள செயிண்ட் ஜோசப் கல்லூரி போட்டியில் பங்கேற்காததால் 5 அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டி லீக் சுற்று முறையில் நடத்தப்பட்டு முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு இரண்டாம் இடம் பெறும் அணிகள் தகுதி பெறும். இந்தப் போட்டியை லயன்ஸ் கிளப் கேபினட் செயலாளர் ராமசுப்ரமணியம் துவக்கி வைத்தார்.

முதல் போட்டியில் பி.கே.ஆர். கோபிசெட்டிபாளையம் பெண்கள் அணியை எதிர்த்து காருண்யா அணி விளையாடியது. இதில், ஆக்ரோஷமாக விளையாடிய காருண்யா அணி முதல் செட்டை 25-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, சுதாரித்து விளையாடிய பி.கே.ஆர் அணி 2 மற்றும் 3வது செட்களை முறையே 25-23, 25-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர், நான்காவது செட்டை காருண்யா அணி 25-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதனால், போட்டியை வெல்லப்போவது என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதியில், காருண்யா பல்கலை., அணி 25-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் சென்னை ஜே.பி.ஆர் கல்லூரி அணி, கோவை அவிநாசிலிங்கம் பல்கலை., அணியை எதிர்த்து விளையாடியது. இதில், ஜே.பி.ஆர். கல்லூரி அணி 25-10, 25-12, 25-12 என்ற நேர்செட்டுகளில் எளிதாக வெற்றி பெற்றது.