நீலகிரியில் பயன்பாடற்று கிடந்த கழிப்பிடக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, கலைக்கூடமாக மாற்றம் செய்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரியில் பயன்பாடற்று கிடந்த கழிப்பிடக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, கலைக்கூடமாக மாற்றம் செய்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக நீலகிரி திகழ்ந்து வருகிறது. இங்கு, சுற்றுலா பயணிகள் கண்டு கழிக்க சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி தனியார் அமைப்பினரும் செயற்கையாக சுற்றுலா தளங்களை உருவாக்கி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடுகின்றனர்.
உதகையின் முகப்பு பகுதியான சேரிங்கிராஸ், உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடம் இருந்தது. இக்கழிப்பிடத்திற்கு அருகில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பழைய கழிப்பிட கட்டிடம் உபயோகப்படுத்தாமல் நாளடைவில் பாழடைந்து போனது. இதைக்கண்ட தன்னார்வலர்கள் சிலர் இக்கட்டிடத்தை தங்களுக்கு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை அணுகினர்.

தாங்கள் இக்கட்டிடத்தைக் கலைக்கூடமாக மாற்றப்போவதாக கூறியதையடுத்து, இக்கட்டிடம் அவர்களுக்கு நகராட்சின் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பில் சீர்செய்து கொடுக்கப்பட்டது. தற்போது, இக்கட்டிடம் ஓவியக் கலைக்கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கலைக்கூடத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர் ஒருவரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவர் கண்ட மனிதர்களை ஓவியமாக வரைந்து காட்சிக்கு வைத்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலைக்கூடத்தை இன்று திறந்து வைத்தார்.
அடுத்த மாதம் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில் இந்த ஓவிய கலைக்கூடம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.