மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பெய்த மழையால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியது.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பெய்த மழையால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு தற்காலிகமாக நீங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரங்களில் அதிகபட்சமாக இரண்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக, இப்பகுதிகளில் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிய கடும் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து போன குளம் குட்டைகளில் ஓரளவு தண்ணீர் மீண்டும் தேங்க தொடங்கியது.
இவ்வாண்டு தொடக்கம் முதலே நிலவிய வறட்சியான சூழலால் கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை நீடித்து வந்தது. இதே போல காடுகளுக்குள் விலங்குகளின் தாகம் தீர்க்கும் நீராதாரங்களும் வறண்டதால் வன உயிரினங்களும் தவித்துப்போயின.
தற்போது பெய்து வரும் மழை, இப்பிரச்சனையை ஓரளவேனும் தவிர்க்கும் விதமாக அமைந்துள்ளது. வனக்குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் அவற்றைத் தேடி வரும் யானை, மான், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்து வருகின்றன. மேலும், சாரல் மழை காரணமாக புற்கள் வளர்ந்துள்ளதால் தீவனமும் கிடைத்து வருகிறது.
குட்டைகளிலும், தடுப்பணைகளிலும் நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்களின் தேவை பூர்த்தியாகியுள்ளது. இது போன்று அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே எதிர் கொள்ளவுள்ள கோடை காலத்தின் வறட்சியை சமாளிக்க இயலும் என்கின்றனர் விவசாயிகள்.