சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரப்பனின் சகோதரருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரப்பனின் சகோதரருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை வழக்கு தொடர்பாக கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி வீரப்பனின் மூத்த சகோதரர் மாத்தையன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 1997-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், தமிழக அரசு தனக்குள்ள அரசியல் அமைப்பு சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இன்று காலை 7.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மனித உரிமைகள் வழக்கறிஞர் ச.பாலமுருகன் கூறுகையில், "ஆதரவற்ற நிலையில் இருக்கும் மாத்தையன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் மாநில அரசு மவுனம் காப்பது வேதனையளிக்கிறது.
விசாரணை சிறை வாசியாக மூன்றாண்டுகள், தண்டனை சிறைவாசியாக இருபத்தி இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
ஆயுள் தண்டனை சிறை வாசிகளை பத்து அல்லது பதினான்கு ஆண்டுக்குப் பின் விடுதலை செய்வது முன் விடுதலை (Premature release) ஆகும். இந்த வகை விடுதலையில் கொடிய குற்றம், மத கலவரம், ஆதாய கொலை, கொள்ளை என சில பாகுபாடுகளை பிரித்து அது போன்ற சிறைவாசிகளை அரசு விடுதலை செய்யாமல் உள்ளது. அவரது வயது முதிர்வு மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அனைத்து மனித உரிமைகள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாநில அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்." என்றார்.