கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை : கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ்(40), அவரது மனைவி ஷைனி (35), அனூப் மேத்யூ(40), கண்ணன்(40), வீரமணி(42) ஆகியோரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேச துரோகம்,கூட்டுச்சதி, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருந்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து கோவை மத்திய சிறையில் 5 பேரையும் அடைத்தனர். பின்பு ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஷைனி, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ளனர்.
இவர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை, கோவை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து மாவோயிஸ்ட் ரூபேஷ், கோவை நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். கோவை சிறையில் இருந்து சைனி,அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நுழைந்த உடன், ‘பெரியார் சிலையை உடைக்கும் இந்து மத வெறியர்களை விரட்டி அடிப்போம். தமிழகத்திற்கு வந்த ராமராஜ்ய ரத யாத்திரையைத் துரத்தி அடிப்போம்..' என கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அனைவரும் நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ரூபேஷ், கண்ணன், வீரமணி ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கினை வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும்,அதே நீதிமன்றத்தில் ரூபேஷ், சைனி, அனூப் மீதான போலி சிம்கார்டு வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கினையும் வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பின்பு ரூபேஷ் கேரளாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். சைனி, அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.