கோவை மாவட்டம் மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை தூர்வாரும் பணிக்காக, ரூட்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சார்பாக ரூ. 3௦ லட்சத்திற்கான காசோலை சிறுதுளி அமைப்பினரிடம் வழங்கப்பட்டது.
கோவை : கோவை மாவட்டம் மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை தூர்வாரும் பணிக்காக, ரூட்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சார்பாக ரூ. 30 லட்சத்திற்கான காசோலை சிறுதுளி அமைப்பினரிடம் வழங்கப்பட்டது.

நொய்யல் நதியினை மீண்டும் பெருக்கெடுத்து ஓட வேண்டுமெனில் நொய்யல் நதியின் நீர்பிடிப்பு பகுதிகள் செப்பனிடப் படவேண்டும் என்பதோடு அதற்கு பெரும் நிதியும் தேவைப்படுகின்றது. இத்தன்னலமற்ற பணிக்குத் துணை நின்று கோவை மாவட்டத்தின் குறிப்பாக நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளின் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தும் பணிக்காக நிதி நன்கொடை பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி, நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன் மற்றும் பணியாளர் பிரதிநிதிகள் இணைந்து குமரன் குட்டையை தூர்வாரும் பணிக்கு ரூ. 30 லட்சத்திற்கான காசோலையை சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதாமோகன் மற்றும் நிர்வாக அறங்காவலர்களிடம் வழங்கினர்.

இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதாமோகன் பேசுகையில், "கடந்த இரண்டு வருடங்களாக தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, செம்மேடு போன்ற புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம். மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் குமரன் குட்டையைப் பற்றியும், அப்பகுதியில் நிலவும் நிலத்தடி நீர் தட்டுப்பாடு குறித்தும் எங்களிடம் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து, குமரன் குட்டையை தூர்வாரும் பணிகளை தொடங்கினோம். அரசு அதிகாரிகள், ரூட்ஸ் நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்களின் உதவியோடு குமரன் குட்டையை மீட்டெடுத்துள்ளோம்," இவ்வாறு பேசினார்.
சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குமரன் குட்டையை தூர்வாரும் பணிகள் குறித்த காணொளி காட்சிகள் திரையிடப்பட்டது.
'எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள குமரன் குட்டை பராமரிக்கப்படாமல் இருந்ததால், மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க வழியின்றி வீணாகி வந்தது. இப்பகுதியின் நிலத்தடி நீர் அளவும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், விவசாயமும், விவசாயிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில், சிறுதுளி அமைப்பினர் குமரன் குட்டையைப் பார்வையிட்டு, தூர்வாரும் பணிகளை தொடங்கி, தற்போது சிறப்பாக முடித்துள்ளனர். இதனால், மழை நீரை சேமித்து வைத்து சிறப்பான முறையில் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும்' என்றார் மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேலு.
இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி கூறியதாவது :- தனக்காக மட்டுமே யோசித்து, வாழும் சுயநலமான எண்ணங்கள் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. அவர்களிடம் பொது நலனுக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகவே, காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூட்ஸ் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சார்பாக ர. 5 லட்சமும், நிர்வாகத்தின் சார்பாக ரூ. 25 லட்சமும் சிறுதுளி அமைப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் தூர்வாரப்பட்ட குமரன் குட்டையில் நீர் சேமிக்கப்பட்டு விசாயிகளுக்கு பயனளிக்கும். மேலும், தூர்வாரப்பட்ட குட்டையை சுத்தமாகவும், சிறப்பாகவும் அப்பகுதி மக்கள் பராமரித்து பாதுகாக்க வேண்டும், என்றார்.