தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாகவும், காவல் துறை மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாகவும், காவல் துறை மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று காலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நந்தகுமார் வீட்டிற்கு இன்று வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது போன்று, தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவங்களுக்கு காவல் துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. நக்சலைட் நடமாட்டம் அதிகரித்துள்ளது, தீவிரவாத இயக்கங்கள் செயல்பாடு வெளிப்படையாக நடைபெறுகிறது.
பா.ஜ.க. மீது நடைபெறும் தொடர் தாக்குதல்கள் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத காவல் துறை கண்டித்தும் வரும் 23-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டம்- ஒழுங்கை சரி வர நிலைநாட்ட, தமிழக முதலமைச்சர் காவல்துறை மீது தனி கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.க நிர்வாகிகள் யார் யார்க்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை காவல் துறை கண்டறிந்து, உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. இங்கு ரத யாத்திரை அமைதியாக நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள் தான் இதனை அரசியல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.