'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது.
கோவை: 'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களைக் கைது செய்யவும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனை மீறி, இந்த ஆண்டிலும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக கோவை வரும் தனியார் பேருந்து ஒன்றுக்கு வண்ண காகிதங்கள் ஒட்டி, மேளதாளங்களுடன் பவனி வந்தனர். மேலும், விமான நிலையம் தொடங்கி, நவ இந்தியா சிக்னல் வரை பேருந்தின் மீது ஈறி நடனமாடிய படி வந்தனர். இது பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளையும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சப்பட வைத்தது.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.